ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும். அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபாவாகும். இதற்கிணங்க, வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபாவாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு – செலவுத் திட்ட யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் அல்லது வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.