நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நபர் ஒருவரைத் தாக்கிய பிரச்சினை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரண்டு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிந்தது.
கைகலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , தனது உயிருக்கு ஆபத்து என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை , காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்குப் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு தரப்பினரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்போது இரண்டு தரப்பினரும் சமாதானமாகச் செல்வதாகவும், முறைப்பாடுகளை மீளப் பெற்றுக்கொள்வதாகவும் கூறி இருவரும் சமரசமாகச் செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்துத் தீர்க்கப்பட்டது.