அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நிலவி வரும் சூழலிலும், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் பின்னணியில், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை நடத்தும் நாடு என்ற ரீதியில் அமெரிக்காவுக்குரிய சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைவாக, ஈரானிய அரசாங்கத்தின் பிரதான பிரதிநிதிகள் குழு கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு அமைய, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்க நுழைவிசைவு (விசா) வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் வெடித்தது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. இந்நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஈரான் தலைவர்களுடன் அவ்வப்போது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதேவேளை, ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்கும் ஈரானியப் பிரதிநிதிகள் குழுவினருக்குக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்கக் கொள்கைகளுக்கு அமைய ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய கொள்வனவுகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை வருகை தரும் குழுவானது கடந்த வருடத்தை விடக் குறைந்தளவான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னைய காலங்களிலும் ஈரானியப் பிரதிநிதிகள் குழுவினர் கடைத்தொகுதிகளுக்குச் செல்வதை அமெரிக்க அரசு தடை செய்திருந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம், ஈரானிய ஐ.நா தூதரகம், ஐ.நா தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் நியூயோர்க்கின் ஜோன் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம் ஆகிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.