நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடிகள் ஊடாக வீடியோக்களைப் பதிவுசெய்வதால் தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளுக்குக் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐல் ஒப் மேன், ஜேர்சி மற்றும் கேர்ண்சி ஆகிய பிராந்தியங்களின் தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைகள் ஒன்றிணைந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. அணியக்கூடிய இத்தகைய நுட்பமான சாதனங்கள் ஊடாக, மற்றவர்களின் அனுமதியோ அல்லது கவனமோ இன்றி உரையாடல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் பதிவுசெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஸ்மார்ட் கண்ணாடிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தொழில்நுட்பத்தில் நன்மைகள் பல காணப்படுகின்ற போதிலும், அதில் பாரியளவில் தனிநபர் உரிமை மீறல் அபாயங்களும் நிலவுவதாக ஜேர்சி தகவல் ஆணையாளர் போல் வேன் தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான கருவிகளைப் பயன்படுத்தும்போது பொறுப்புடனும் ஏனையவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையிலும் நடந்துகொள்ளுமாறும், எந்தச் சூழலில் பதிவுசெய்வது பொருத்தமானது என்பதைச் சிந்தித்துச் செயற்படுமாறும் அதிகாரிகள், பயனாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இத்தகைய பதிவுகளால் பாதிக்கப்படும் நபர்கள் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தமக்குரிய உரிமைகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என போல் வேன் வலியுறுத்தியுள்ளார்.