உங்கள் காதல் துணையுடன் இருக்கும் போது திடீரென தூக்கம் வருவது சிலருக்கு ஆர்வமின்மை அல்லது சலிப்பு போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அது உங்கள் உடலும் மனமும் முழுமையான பாதுகாப்பையும் நிம்மதியையும் உணர்கின்றன என்பதற்கான இயற்கையான அறிகுறி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆழமான நெருக்கமும் உணர்ச்சி ரீதியான பாதுகாப்பும் கொண்ட உறவுகளில் இருப்பவர்கள், அதிக நிம்மதியான மற்றும் தரமான தூக்கத்தை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, பாதுகாப்பாக இணைந்த ஜோடிகள் நீண்டகால ஆரோக்கியத்திற்குத் துணைபுரியும் நல்ல தூக்கத்தைப் பெறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உங்கள் துணையின் அருகில் இருக்கும்போது, உங்கள் மூளை அந்தச் சூழலை பாதுகாப்பானதாக உணர்கிறது. இதனால் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ‘காதல் ஹார்மோன்’ அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன், மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவைக் குறைத்து, உடலையும் மனத்தையும் தளர்ச்சியடையச் செய்கிறது. அதன் விளைவாக, இயல்பாகவே தூக்கம் வரத் தொடங்குகிறது.
மேலும், நம்பிக்கையும் அன்பும் இணையும் போது, பாராசிம்பத்தடிக் நரம்பு மண்டலம் செயல்படத் தொடங்குகிறது. இது உடலுக்கு ஓய்வு மற்றும் சீராக்கம் என்ற சிக்னலை அனுப்புகிறது. இதயத் துடிப்பு மெதுவாகி, இரத்த அழுத்தம் சீராகி, செரிமானம் மேம்பட்டு, உடல் முழுவதும் அமைதி நிலவுகிறது. இந்த நிலையில், தூக்கம் வருவது இயற்கையான செயலாக மாறுகிறது.
பலர் தனியாக இருக்கும் போது எதிர்காலம் குறித்த கவலைகளிலும் மன அழுத்தத்திலும் மூழ்கி தூக்கத்தை இழக்கின்றனர். ஆனால், அன்பான துணையின் அருகில் இருக்கும்போது, அந்தக் கவலைகள் குறைந்து, மனம் அமைதியடைந்து, இயல்பான தூக்கம் ஏற்படுகிறது.
இந்த நெருக்கமான உறவு மற்றும் நிம்மதியான தூக்கம் இணைந்து, இரத்த அழுத்தம் சீராகுதல், மன அழுத்தம் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.
எனவே, அடுத்த முறை உங்கள் காதல் துணையுடன் இருக்கும்போது தூக்கம் வந்தால், அதை சலிப்பு அல்லது ஆர்வமின்மை என நினைக்க வேண்டாம். அது உங்கள் உடலும் மனமும் “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்” என்று சொல்லும் அழகான சிக்னலாகவே பார்க்க வேண்டும்.