இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என அனைவரும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்கி இருப்பதாகவும் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்தியா இந்தப் புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழு இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர் என அறிவித்திருந்தது. போருக்கு முன்னர் வன்னியில் இருந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் போரின் பின்னர் இராணுவக்கட்டுபாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களின் புள்ளிவிவரங்கள் என்பவற்றின் அடிப்படையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜீவ்காந்தியின் ஒப்பந்தத்தை புலிகள் அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக முதன் முறையாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தவர் ராஜூவ் காந்தி. அந்த உடன்பாட்டை முறிக்க யார் காரணம்? அதன் விளைவாலேயே உள்நாட்டுப் போர் மூண்டது.பலர் இறந்தனர். அந்த வரலாறு மனவருத்தம் தரும் வரலாறு. ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், அங்கு தமிழரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும். 15 ஆண்டு கால சோகம் நடந்திருக்காது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்து கொண்டிருந்தது. இதன்போது இந்தியா, இன்னொரு நாட்டுடன் பேச்சு நடத்தி இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை தடுக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனால் இறுதிப் போரில் அப்பாவி மக்கள், இராணுவத்தினர், விடுதலைப்புலிகள் என்று 65 ஆயிரம் பேர் உயிரிழக்க நேர்ந்தது.
இலங்கை மீறியது இலங்கை போன்ற இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது எளிதல்ல. ஆனாலும் அதற்காகத்தான், இந்திய இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசியல் சட்டத்தில் 13 ஆவது திருத்தம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆவது அரசியல் திருத்தத்தின்படி, சிங்களம் போல் தமிழையும் அரசு மொழியாக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து புதிய மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், இந்த வாக்குறுதிகளை இலங்கை மீறிவிட்டது என்றார்