தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண்ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இலினொய்ஸின் கிழக்கில் உள்ள லொய்ஸ் என்ற இடத்தில் வசித்த மிச்செல் ரோவ்லிங் என்ற 25 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது அவர் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண்ணின் உடலில் காணப்பட்ட வெட்டுக் காயங்களின் அடிப்படையில் அவர் கூரிய ஆயுதங்களால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மிச்செல், உயிரிழப்பதற்கு முன் அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட தகவல் பொலிஸாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“எனக்கு இன்றிரவு ஏதாவது நடந்தால்… நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்பதை என் குழந்தைகளுக்கு தெரியபடுத்துங்கள்…. அம்மாவுக்குச் சொல்லுங்கள் நான் அவளை நேசிக்கிறேன் என்று…” என அவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்திருந்தார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே மிச்செல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசத்துக்குப் பொறுப்பான புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.