இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று வடக்கு செல்வது தனி ராஜ்யம் அமைக்கவா என்று கேள்வி எழுப்பி, இந்திய பிரதமரின் உத்தேச வடக்கு விஜயத்தை தாம் எதிர்ப்பதாக, நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐதேக கூறியுள்ளது.
இதன்மூலம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் குறை கண்டு இனவாதம் பேசும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, குணதாச அமரசேகர, பொதுபல சேனையின் கலபொட அத்தே ஞானசாரர் ஆகியோர் அடங்கிய பட்டியலில், ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற குழுவின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்கவும் சேர்ந்து கொண்டுள்ளார். ஜோன் அமரதுங்கவின் இந்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஐதேகவின் இக்கருத்து இன்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழ் சிவில் சமூகத்தையும் விசனப்படுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐதேக சிங்கள வாக்குகளை பெற வேண்டும் என்பது உண்மை. அதைத்தான் நானும் நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். ஆனால் அதற்கு இது வழியல்ல. மகிந்தவை பின்பற்றுவதன் மூலமாக சிங்கள வாக்குகளை ஐதேக பெற முடியாது. ஐதேக எங்கள் தோழமை கட்சிதான். ஆனால், நாங்கள் உண்மையை பேச ஒருபோதும் தயங்குவதில்லை. அதனால்தான் நாம் தனி கட்சியாக செயல்படுகிறோம். ஆகவே இப்படியே போனால் சிங்கள வாக்கும் இல்லை, சிறுபான்மை வாக்கும் இல்லை என்ற நிர்க்கதி நிலைக்கு ஐதேக தள்ளப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.