லண்டனில் உள்ள நண்பர்கள் கூட்டம் என்ற அமைப்பைச் சேர்ந்த திரைப்பட ஆர்வலர்கள், செம்மொழி என்ற குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். மொழிக் கலப்பு மற்றும் தமிழ் மொழி மீதான ஆங்கில ஆதிக்கத்தை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைப் பேசும்போது பிற மொழிகளைக் கலந்து பேசுவதில்லை; தமிழில் பேசும்போது மட்டும் ஏன் ஆங்கிலத்தைக் கலந்து பேச வேண்டும் என்பதே இந்த படம் எழுப்பும் கேள்வி.
தற்போதைய தலைமுறையினர் நமது மொழி மற்றும் வரலாற்றின் பின்னணி அறியாமல் உள்ளனர். அவர்கள் இதை மறந்தே போய் விடும் அபாய நிலை இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்கள் உணர்ந்துள்ள அளவுக்கு, தாயகம் வாழ் தமிழர்கள் இந்த அபாயத்தை அறியவில்லை என்ற செய்தி இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சக தமிழர்களுடன் பேசுகையில் தமிழிலேயே பேசுவோம் என்ற வாசகத்துடன் நிறைவு பெறும் இந்த குறும்படத்திற்கு, தமிழர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை புதுமை எழுதி இயக்கி உள்ளார். ஜான விஜய் குரூஷ் இசையமைக்க, சண்முகம் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.