ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் எதிர்வரும் மார்ச் மாதம் மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யோசனைக்கான முழுமையான அறிக்கை அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட பின்னரும் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து வடக்கில் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்பு சம்பந்தமாக அந்த அறிக்கையில் முழுமையான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரித்துள்ளமை, அந்த காணிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகள், ஆலயங்கள் உட்பட வழிப்பாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டமை, பாதுகாப்பு படையினர் வடக்கில் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஆக்கிரமித்துள்ளமை போன்ற விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் வடக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த மாகாணத்தின் நடவடிக்கைகளை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை தொடர்பிலும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.