அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்விற்கு முன்னர் இலங்கையின் உண்மை நிலை பற்றிய எட்டு வீடியோ காணொளிகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளோம் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
யுத்த கால கட்டத்தில் இலங்கையில் நடந்தவை என்னவென்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிந்து கொள்ள வேண்டும். உலகின் நடுநிலையான ஒன்றியம் பக்கச்சார்பாக நடந்து கொள்ளக்கூடாதென மேலும் அவர் தெரிவித்தார்.
இவ் ஒளிநாடாக்கள் யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் புரிந்துணர்வொன்றினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
யுத்த குற்றங்கள் இலங்கை இராணுவத்தினரால் இடம்பெறவில்லை என்பதற்கு எம்மிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றினை அடிப்படையாக வைத்தே அவ் எட்டு வீடியோ காணொளிகளையும் தயாரிக்கின்றோம். இதில் உண்மையே அடங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி ஆவணப்படங்களை இராணுவமே தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.