அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் 10ம்திகதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக நிஷா தேசாய் பிஸ்வால் பொறுப்பேற்றிருந்தார். றோபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட, இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் இதுவாகும். ஜனவரி இரண்டாவது வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் நிஷா தேசாய் பிஸ்வால் அனுமதி கோரியுள்ளார் என்பதை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியிருந்தார். எனினும், சிறிலங்கா அரசாங்கமோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ, நிஷா தேசாய் பிஸ்வாலின் கொழும்பு பயணத்தை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில், அவர் பெரும்பாலும் வரும் 10ம் நாள் கொழும்பு வருவார் என எதிர்பாக்கப்படுகிறது வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஆராயும் நோக்கிலேயே நிஷா தேசாய் பிஸ்வால் கொழும்பு வரவுள்ளார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் முக்கிய கவனம் செலுத்தவுள்ளார்.