புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை மாநில அரசு நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சில முறைகேடுகள் நடந்தது என்பதை கருத்தாக ஏற்று கோயிலை அரசு நிர்வகிக்க வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்த கோயிலில் முறைகேடு நடந்து வருவதாக சிவனடியார் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 2009 ல் தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்தியது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தீட்ஷிதர்கள், சுப்பிரமணியசாமி ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
பி.எஸ். சவுகான் பாட்டே ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த அப்பீல் வழக்கை விசாரித்தது. இதில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர் . தங்களின் உத்தரவில் :
முறைகேடுகள் நடந்தது என்ற காரணத்திற்காக கோயிலை அரசு நிர்வகிக்க வேண்டியதில்லை. முறைகேடு நடந்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால் கையகப்படுத்த அதிகாரம் இல்லை. செயல் அதிகாரி நிரந்தரமாக செயல்பட முடியாது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவும், சிறப்பு அதிகாரி நியமன உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் தீட்ஷிதர்கள் கையில் இருந்த இந்த கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்ஷிதர்கள் கைக்கு செல்கிறது.