வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும், இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோறியும் இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தனர்.
வவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி மன்னார்-வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை வந்தடைந்தது.
‘சிதைக்காதே சிதைக்காதே இன உறவை, இந்திய வீடமைப்பு திட்டத்தை தந்த இந்தியாவுக்கு நன்றிகள், அழிக்காதே அழிக்காதே ஒற்றுமையினை அழிக்காதே, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏன் எமக்கு கிடைத்த வீட்டை இல்லாமல் ஆக்குகின்றாய், இந்திய அரசே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய் பிரசாரத்துக்கு செவி சாய்க்காதே, இலங்கை ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதியில் இருந்து எம்மை பாதுகாருங்கள், ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் எமது சமூகங்களின் பாதுகாப்புக்கு போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.