சவுதி அரேபியாவில், 610 கிலோ எடையுள்ள, பிரமாண்ட மனிதர், நான்கு மாதங்களில், 320 கிலோ எடையை குறைத்து, 290 கிலோ எடைக்கு மெலிந்தார். அதீத உடல் பருமன் நோயால் அவதிப்பட்ட, காலித் மோசன் அல்ஷாயரி என்பவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து, உடல் பருமனை குறைக்கும் படி, டாக்டர்களுக்கு, அந்நாட்டு அரசர் அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார். படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில் இருந்த ஷாயரியின் வீட்டுக்கு சென்ற டாக்டர்கள், மருத்துவமனைக்கு தூக்கி வந்து, சிகிச்சை அளித்தனர்.
அவர் அமர, வடிவமைக்கப்பட்ட, மிகப் பெரிய சக்கர நாற்காலி, உலகிலேயே மிகப் பெரிய சக்கர நாற்காலியாக, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. முதல் மூன்று மாதங்களில், 150 கிலோவும், அதன் பின், 170 கிலோவும் எடை குறைந்தது. இறக்குமதி செய்யப்பட்ட, பிரத்யேக உணவுகள் ஷாயரிக்கு வழங்கப்பட்டன. மூன்று படுக்கைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தி வந்த ஷாயரி, தற்போது ஒரு படுக்கையை மட்டுமே பயன்படுத்துகிறார். நான்கு மாதங்களில், 320 கிலோ எடையை குறைத்தது, உலக சாதனை என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.