அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா பிஜ்வாலை சந்திக்க சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை நிஷ பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பல முறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
நிஷ பிஸ்வாலை சிறிலங்கா அதிபர் சந்திக்காமைக்கு கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. எனினும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் திட்டமிட்டே இந்தச் சந்திப்புத் தவிர்க்கப்பட்டதாக நம்புகின்றன. பிஷ்வால் மூலம் அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் நேரடியாக கடுமையான செய்தி ஒன்றை பரிமாறிக் கொள்வதை தவிர்க்கவே சிறிலங்கா அதிபர், அவரைச் சந்திக்காமல் விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.