கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தாலி கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சாத்தியக் கூறுகளை கடந்த வாரம் மத்திய அரசு நீக்கியது. ஆனால், அவர்கள் மீது இந்திய கடற்கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்படி, குற்றச்சாட்டு நிஷரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுவார்கள்.
இந்த விசாரணைக்கு இத்தாலி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரிடம் இன்று மனு அளித்துள்ளது. இந்த மனுவை மதிப்பீடு செய்ய மனித உரிமைகள் ஆணையர் ஏற்றுக்கொண்டதாக இத்தாலி வெளியுறவு மந்திரி எம்மா பொனினோ தெரிவித்தார்.
“இரண்டு வீரர்களுக்கும் எங்கள் நாடு ஆதரவாக உள்ளது. வீரர்கள் இருவரும் கடற்கொள்ளையர்களோ அல்லது தீவிரவாதிகளோ கிடையாது. இத்தாலி அரசு ஊழியர்கள். அவர்களை மீண்டும் இத்தாலி கடற்படையில் சேர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று பொனினோ கூறினார்.