இலங்கையின் மகசீன் சிறையில் மர்மமான முறையில் மரணமான பிரித்தானிய தமிழர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் பிரித்தானிய தமிழ் பேரவை கோரிக்கையை விடுத்துள்ளது.
செஸ்சிங்டன், சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிறைக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏனைய சிறைக்கைதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் விஸ்வலிங்கம் உயிர்தப்பினார்.
2012 ஆம் ஆண்டிலும் அவர் தாக்குதல் ஒன்றில் இருந்து உயிர் தப்பினார். இந்தநிலையில் அவரின் மரணம் தற்போது நிகழ்ந்துள்ளது.
கோபிதாஸின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.
எனவே பிரித்தானிய பிரஜை ஒருவர் வெளிநாடு ஒன்றில் மரணமானால் மேற்கொள்ளவேண்டிய அனைத்து விதமான விசாரணைகளும் விஸ்வலிங்கம் விடயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.