ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் உள்ளடங்காது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயம் மட்டுமே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரிவித்திருந்த கருத்தும் சர்வதேச விசாரணை கோரப்படமாட்டாது என்ற விடயத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அத்துடன் சர்வதேச அரங்கில் முக்கிய நாடுகளாக கருதப்படும் சீனாவும் ரஷ்யாவும் இலங்கைககு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்திருந்ததுடன் இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தன.
இதேவேளை இலங்கை அரசாங்கமும் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்திவருவதாகவும் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசம் தேவை என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் கோரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்தக் கூட்டத் தொடரில் ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. அத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. ஆரம்ப அமர்வில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
அந்தவகையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உரையாற்றவுள்ளதுடன் விசேட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
அந்தவகையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று எதிர்பார்கக்ப்படுகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெரிக்காவின் அமைச்சரவை உறுப்பினர் சமந்தா பவர், பிரிட்டனின் இராஜாங்க மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கனடாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
அமைப்புக்களை பொறுத்தவரையில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் அன்டர்ஸ் ஜோன்ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
இம்முறை கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு பிரிட்டனும் அனுசரணை வழங்கவுள்ளது. பிரேரணைக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் பிரிட்டனும் அமெரிக்காவும் பாரிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. அதேவேளை மறுபுறம் இலங்கையும் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கோரி படையெடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்ததுடன் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தார்.
எனினும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்தியா எவ்விதமான உத்தரவாதத்தையும் வழங்காத நிலையில் சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அண்மையில் இலங்கைககு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்தியாவானது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் மனித உரிமைப் பேரவையின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் விஜயம் செய்ததுடன் ஆதரவு கோரும் படலத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை அமெரிக்காவும் பிரிட்டனும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் பாரிய இராஜத்தந்திர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பிரிடடனின் இராஜாங்கஇ சமூக திணைக்களம், உள்ளூராட்சி மற்றும் வெளிவிவகாரஇ பொதுநலவாய அலுவலகம் ஆகியவற்றுக்கான சிரேஷ்ட அமைச்சர் பரனெஸ் வர்சி பிரேரணைக்கு ஆதரவு வெளியிட்டுள்ள உறுப்பு நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பில் மிகவும் கடின உழைப்புடன் செயற்பட்டுவருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.