பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் கடந்த மாதம் பட்டம் விட்ட பலரும் கைதுசெய்யப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான பட்டங்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் மாலை வேளைகளில் சிறுவர்களின் பிரபலமான விளையாட்டான பட்டம் விடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சிறுவர்களின் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு பைசலாபாத்தில் தற்போது பட்டம் விடுவது முற்றாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளாக பன்ஜாப் மாகாணத்திலும் பட்டம் விடுவதற்கு தடையுள்ளது. பட்டம் விட பயன்படுத்தப்படும் கூர்மையான நூல் காரணமாக விபத்துகளில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக முறைப்பாடுகள் வந்ததையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் பட்டம் விடுவதில் ஏற்படும் போட்டியில் ஏனைய பட்டங்களை அறுப்பதற்கு அரிசி பசை கலந்து நொறுக்கப்பட்ட கண்ணாடி போன்ற உராய்வு பொருட்களை பட்டத்துடன் இணைத்து அனுப்புவது பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தடையின் பின்னணியில் கடும்போக்கு குழுக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் பட்டங்களை பறக்கவிடும் அந்நாட்டின் சம்பிரதாய திருவிழாவுக்கு எதிரானவர்களாவர்.