பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது சுமத்தப்பட்ட தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று முன் தினம் ஏற்றுக்கொண்டது. இதனால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக கூறப்படுகிறது..
பாகிஸ்தானில் தன்னை ஜனாதிபதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு அறிவித்துக்கொண்ட பர்வேஸ் முஷ்ரப், 2007ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தார். பின்னர் அதிபர் பதவியில் இருந்து 2008ஆம் ஆண்டு இறங்கியதும், லண்டனுக்கு தப்பி சென்றார். பின்னர் சில ஆண்டுகள் துபாய் நாட்டில் வசித்தார்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியை சிறையில் அடைத்த குற்றத்திற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் அவர் இந்த வழக்கில் ஆஜராக பாகிஸ்தான் வரவில்லை. எனினும் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தான் திரும்பிய அவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
தேசத்துரோக வழக்கில் இதுவரை 35 முறை வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த வழக்கை நடத்தி வரும் பாகிஸ்தான் நீதிமன்றம் அவர் மீதான தேசத்துரோக வழக்கிற்கு தேவையான ஆதாரம் இருப்பதாக கருதி அவர் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது. எனவே அவருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ தந்தை பூட்டோ தூக்கிலிடப்பட்டார் என்பது தெரிந்ததே.