யாழ். தொண்டைமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இரு மருங்கிலும் இலட்சக்கணக்கான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில்கரையொதுங்கியுள்ளன.
குறித்த மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக தொண்டைமானாற்றுக் கடல் நீரேரி வழமைக்கு மாறாக அதிகம் வற்றியுள்ளது. எஞ்சியுள்ள குறைந்தளவு நீரில் எல்லா மீன்களுக்கும் போதுமான அளவு ஒட்சிசன் இல்லை. அதுமட்டும் அல்லாமல் உயர் வெப்பநிலை காரணமாக நீரில் ஒட்சிசனின் கரைதிறனும் குறைவாக உள்ளது. இந்த ஓட்சிசன் பற்றாக்குறைவே மீன்களின் சடுதியான இறப்புக்கான பிரதான காரணமாகும்.