தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இதனை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என்று நீர்ப்பான முகாமைத்துவ அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை முன் கொண்டு செல்ல தயாராகவே இருக்கின்றோம்.
ஆனால் இதுவரை தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் சாதகமான பதில் எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவில்லை. அவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பார்கள் என்று இன்னும் நம்புகின்றோம்.
தேசியப் பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்து பேச்சுவார்த்த்தை நடத்த முடியாது. இரண்டு தரப்புக்கள் பேச்சு நடத்தி அதனை வெற்றிபெற செய்ய முடியாது. தேசிய விவகாரங்கள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும்.
எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமாகும். எனவே கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளும்வகையில் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வை அடைய முடியும். எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவே யதார்த்தகரமான இடமாக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.