ஈழத்தில் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது. ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் கு.கணேசன். இவர் கர்நாடகாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள பார்த்திபன் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கலை துறையை கவனிக்க, சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கு.கணேசனிடம் தெரிவிக்கையில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலைவரை கதையாக்கப்பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இசைப்பிரியாவின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது..” என்றார் கு.கணேசன்.
இந்தப் படத்திற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது.