பேஸ்புக் நிறுவனம் அதன் உள்ளடக்கங்களைத் தணிக்கை செய்து வெளியிடும் மதிப்பீட்டாளர்கள் 11ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு 392 கோடி ரூபாய் வழங்கவும், தேவையான மனநல ஆலோசனை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நச்சுத் தன்மை கொண்ட, அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் படித்துத் தணிக்கை செய்து வெளியிடப் பணியாளர்களை அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய செய்திகள், படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது மனநலப் பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண் பணியாளர் ஒருவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் இப்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் 11 ஆயிரத்து 250 பேருக்கு மொத்தம் 392 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் குறைந்தது 75ஆயிரம் ரூபாய் முதல் அதிகப்பட்சம் நாலரை லட்ச ரூபாய் வரை கிடைக்கும். அத்துடன் அவர்களுக்கு மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.