செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன்

2 minutes read

ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா நடிக்கும் ‘புரூஸ் லீ’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிவருகிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் ‘நாளைய இயக்குநர்’ தந்த அடை யாளத்தோடு இயக்குநர் பாண்டி ராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படவேலைகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்…

‘நாளைய இயக்குநர்’ போட்டியில் பங்குபெற்ற பலரும் நேரடியாக படங்களை இயக்கினர். ஆனால் நீங்கள் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது ஏன்?

குறும்படங்கள் இயக்கினால் படம் எடுக்கலாம் என்கிற கான்சப்ட் சரிதான். ஆனால், உதவி இயக்குநராக இருந்து அனுபவத்தோடு படம் எடுக்கும்போது நிச்சயம் அந்த படம் சிறப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. நல்ல சினிமா எடுக்க அனுபவம் முக்கியம். நான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் அரை இறுதிச் சுற்றுவரை வந்தேன். அப்போது அதன் நடுவராக இயக்குநர் பாண்டிராஜ் சார் இருந்தார். அந்த அறிமுகத்தில்தான் அவரிடம் சேர்ந்தேன். ‘பசங்க 2’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் வேலை பார்த்தேன். நான் அவரிடம் சேராமல் நேரடியாக படம் இயக்க வந்திருந்தால் ‘புரூஸ் லீ ’ படம் இப்போது வந்திருப்பது போல் நிச்சயம் வந்திருக்காது.

இந்தக் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் எப்படி பொருத்தமாக இருந்தார்?

சண்டையே போடத் தெரியாத ஒருவன் ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்படத்தின் கதைக்களம். ஹீரோவை சுற்றி நடக்கும் விஷயங்களை காமெடி கலந்து ஃபேண்டஸியாக சொல்ல நினைத்திருக்கிறோம். இந்தக் கதைக்கு வளர்ந்து வரும் நாயகன்தான் பொருத்த மாக இருப்பார் என்பதால் அவரை இப்பாத்திரத்தில் நடிக்கவைத்தேன்.

ஜி.வி சார் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். பெரிய இசையமைப்பாளர். இருந்தும் அவர் படப்பிடிப்பில் மிக எளிமையாக இருந்தார். இந்தப்படத்துக்கு இசையும் அவர்தான். அரைமணி நேரத்தில் 2 பாடல்களை கொடுத்தார். நான் அவருடன் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறேன்.

‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் அவர் மீதான பார்வையை வேறு மாதிரி மாற்றியுள்ளதே?

ஒரு நடிகரின் முதல் படத்தைப் போன்றே அடுத்த படத்தையும் எதிர் பார்த்து ரசிகர்கள் வருவதில்லை. விஜய்க்கு ஒரு ‘ரசிகன்’, தனுஷுக்கு ஒரு ‘துள்ளுவதோ இளமை’. அதுபோல் ஜி.வி.பிரகாஷுக்கு ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ அவ்வளவுதான். இந்தப்படம் அவருக்கு வேறுமாதிரியான ஒரு ஓபனிங்கை கொடுக்கும்.

படத்தின் நாயகி கீர்த்தி கர்பந்தா இந்தியில் பிஸியான நாயகியாக இருக்கிறாரே?

அவர் தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழில் அவருக்கு இது முதல் படம். நாயகி வேடத்துக்கு துணிச்சலான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கும்போதுதான் அவரது புகைப்படம் கிடைத்தது. தமிழில் பேசுவது மட்டும்தான் அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்றபடி அவர் ஒரு சிறந்த நடிகை.

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

என் சொந்த ஊர் திருச்சி. பி.காம் படிக்கும்போதே சினிமா மீது விருப்பம் இருந்தது. நண்பர்கள் உதவியோடு முதல் குறும்படத்தை எடுத்தேன். அதுவே அடுத்தடுத்து 6 குறும்படங்களை எடுக்க உத்வேகத்தை கொடுத்தது. அடுத்து பாண்டிராஜ் சாரிடம் சேர்ந்தேன். அவர் மாத சம்பளம் கொடுத்தார். படித்து முடித்து பையன் வேலைக்கு போனால் என்ன சம்பாதிப்பானோ அதைத்தான் செய்கிறான் என்ற நினைப்பில் வீட்டில் சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது படம் இயக்க வந்துவிட்டேன். என் பெயரை பிரசாந்த் பாண்டியராஜ் என்று போட்டிருக்கிறேன். எல்லோரும் குருவோட பெயரா என்று கேட்கிறார்கள். என் அப்பாவின் பெயரும், என் குரு பாண்டிராஜ் பெயரும் ஒன்றாக அமைந்தது என் அதிர்ஷ்டம் அப்பாவும், குருவும் கிட்டத்தட்ட ஒண்ணுதானே.

அடுத்து பேய் படம் இயக்கப் போகிறீர்களாமே?

தயாரிப்பாளர்களிடம் ஒருநாள் திகில் கதை ஒன்றைச் சொன்னேன். அதற்கு அடுத்த நாள் ‘எங்கள் குழுவின் அடுத்த படம்’ என்று ட்விட்டரில் பதிவு செய்துவிட்டார்கள். ‘புரூஸ் லீ ’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை டிசம்பர் 31-ம் தேதி தொடங்குகிறோம். ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு. மே மாதம் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம்.

 

சந்திப்பு: ம.மோகன் | tamil.thehindu.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.