புதிதாக நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அசிசுல்லா ஃபாஸ்லி, இந்த வார இறுதியில் அண்டைய நாடான பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை நடத்துவதற்கு குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜாவுடன் கலந்துரையாடுவார்.
ரமிஸ் ராஜாவும் ஃபாஸ்லியின் பாகிஸ்தான் வருகையினை உறுதி செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய பிறகு ஆண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்புகள் வந்தாலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவுவதில் உறுதியாக உள்ளதாகவும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை நாடவுள்ளதாகவும் அசிசுல்லா ஃபாஸ்லி கூறியுள்ளார்.
அதன் முதற்படியாக பாகிஸ்தானுக்கான விஜயமும், அதன் பின்னர் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள ஃபாஸ்லி திட்டமிட்டுள்ளார்.