Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றதா? இராமச்சந்திரன் நிர்மலன்

வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றதா? இராமச்சந்திரன் நிர்மலன்

6 minutes read

அண்மைக் காலங்களில் தமிழ் மக்களின் மனதில் குடிகொள்கின்ற முக்கியமான கவலைகளில் நாம் கல்வியில் பின்தள்ளப்படுகின்றோம் என்பதும் ஒன்றாகும். போராட்ட காலத்தில் கூட கல்வியில் பின்தங்கவில்லை என தமது ஆதங்கங்களை பலர் வெளியிட்டுவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உண்மையில் வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சியடைந்து விட்டதா? அதனை நாம் க.பொ.த சாதாரண தர மாகாண தரவரிசை அடிப்படையில் கூறிவிட முடியுமா? என்பதே முதலாவது வினாவாகும்.

இலங்கையில் பாடசாலைக் காலத்தில் மூன்று பொதுப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. அவையாவன தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை , க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகும். இவற்றில் எப்பரீட்சையின் அடிப்படையில் வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து காணப்படுகின்றது என கூறுவது?

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது உண்மையில் மாணவர்களின் கல்வி அடைவை அறிவதற்காக நடாத்தப்படும் பரீட்சையல்ல. அது மாணவர்களை இடைநிலைப் பாடசாலைகளிற்குத் தெரிவு செய்வதற்கும், வறிய மாணவர்களில் திறமையான மாணவர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளற்று கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்குவதற்காகவுமே நடாத்தப்படுகின்றது. இதன் நோக்கம் இப்போது கேள்விக்குறியாக இருப்பதுடன் இப் பரீட்சை சிறுவர்;களைப் பாதிப்பதாகவும் கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். இப் பரீட்சை அடிப்படையில் வடமாகாணத்தின் கல்வி நிலையை அளவிடுவது என்பது நகைப்பிற்குரியது. ஆனபோதிலும் வடமாகாண சிறுவர்கள் இப்பரீட்சையில் கிராம நகர வேறுபாடுகளின்றிச் சாதனை படைக்கிறார்கள் என்பது கண்கூடு.

அடுத்ததாக க.பொ.த.சாதாரணப் பரீட்சையினை நோக்கினால், அப்பரீட்சையானது உயர்தரத்தில் பொருத்தமான பாடத்துறைகளைத் தெரிவு செய்யவும் ஏனைய கற்றல் செயற்பாடுகளைத் தொடரவும் மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கு அடிப்படைத் தகைமையாகவும் கொள்ளப்படுகிறது. இது ஒரு போட்டிப் பரீட்சை அன்று. க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடமாகாண தர நிலையை நோக்கினால் வடமாகாண தர நிலையானது அண்மைய காலங்களில் இறுதி நிலையாகிய ஒன்பதாம் நிலையிலேயே காணப்படுகிறது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்துவிட்டது என கூறமுடியுமா?

உண்மையிலேயே வடமாகாணத்தில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் வருடா வருடம்; அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2019 ஆண்டு சிறிய வீழ்ச்சியினைக் கண்டு இருக்கிறது. அதே சமயம் தேசியமட்டச் சித்திவீதத்திலும் 2019 ஆண்டு வீழ்ச்சி இருப்பது நோக்கத்தக்கது. ஏனைய வருடங்களில் படிப்படியாக வடமாகாணத்தில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2009 ஆண்டு; க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீத அடிப்படையில் வடமாகாணம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. 2009 ஆண்டு; வடமாகாணதில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் 55.71% 2019 ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீத அடிப்படையில் வடமாகாணம் ஒன்பதாம்; இடத்தை பெற்றுக் கொண்டது. 2019 ஆண்டு; வடமாகாணதில் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதியுடையோர் சதவீதம் 67.74% அப்படியாயின் வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றது என்று எவ்வாறு கூறுவது?

வடமாகாண க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பு ஏனைய மாகாணங்களில் க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பிலும் குறைவானது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்று கூறமுடியுமா? இந்த ஒப்பீடுகள் எந்தளவு சரியானவை வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அண்ணளவாக 90,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நாட்டின் வறுமை கூடிய மாவட்டங்களான முல்லைத்தீவு ,கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்கள் வடமாகாணத்திலே காணப்படுகின்றன. இவ்வாறான பல புறச்சூழல்கள் காணப்படும் மாகாணத்தை மற்றைய மாகாணங்களோடு ஒப்பிடும் முறையே தவறானது.

இதேவேளை தமிழ் , சிங்கள மாணவர்களிடையே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பிரதான பாடங்களில் மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறு வினாத்தாள்களை உடையன. அட்டவணை-1 இனை அவதானிக்கின்ற போது தமிழ் , சிங்களம் மற்றும் பௌத்தம் , சைவநெறி என்பவற்றில் சிங்களம் , பௌத்தம் என்பவற்றில் ஊ அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதம் தமிழ் , சைவநெறி ஆகியவற்றில் C அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதத்திலும் விட குறிப்பிடத்தக்களவு அதிகமாகும் போது வடமாகாணத்தின் தரநிலை பின் நோக்கி நகர்வதனை அவதானிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. வேறுவேறு பாடங்களான மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறான கடினச்சுட்டி கொண்டவை.

எனவே இவற்றின் பெறுபேறு நிச்சயமாகத் தரநிலையில் தாக்கத்தைச் செலுத்தும். சிங்கள மாணவர்கள் மொழி மற்றும் சமயப் பாடங்களில் ஊ அல்லது அதற்கு மேல் பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகும் போது அவர்கள் 3C, 3S எடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. ஆனால் தமிழ் மாணவர்கள் மொழி மற்றும் சமயத்திற்கு ஊ அல்லது அதனிலும் அதிகமாகப் பெறுபவர்களின் சதவீதம் சிங்கள மாணவர்களை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே 3C,3S எடுப்பதற்கான வாய்ப்புகள் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்களுக்குக் குறைவாகின்றது.

வேறுவேறு வினாத்தாள்களில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தோற்றி அவற்றின் புள்ளிகளை ஒரே நியம அளவீட்டுக்கு மாற்றாமல் தரங்களை இட்டு மாகாண தரவரிசையைக் கணிப்பது புள்ளிவிபரவியல்ரீதியில் தவறானவை. இவற்றின் அடிப்படையில் வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்பதும் ஏற்புடையதன்று. வடமாகாணம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பல பௌதீக, சமூக, பொருளாதார, கலாச்சாரக் காரணிகளையும் தாண்டி க.பொ.த உயர்தரத்;திற்குத் தகுதியுடையோர் சதவீதத்தைப் படிப்படியாக அதிகரிக்கின்றது என்பதே உண்மையாகும். வடமாகாணத்தின் வளர்ச்சி வீதத்தை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுவது தவறானது ஆகும்.


அடுத்ததாக க.பொ.த உயர்தரப் பரீட்சையினை நோக்கினால் உயர்தரப் பரீட்சையானது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் ஏனைய உயர் கல்விகளைத் தொடர்வதற்கும் மற்றும் பொருத்தமான தொழில்த் துறைகளைத் தெரிவு செய்வதற்கும் நடாத்தப்படும் ஒருபோட்டிப் பரீட்சையாகும். 2019 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாகாண தர நிலைகளில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தையும் , கணித , விஞ்ஞான மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் வடமாகாணம் இரண்டாவது நிலையிலும் காணப்படுகின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவுகளில் ஒன்பதாம் இடத்தையும் ஏனைய பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

அட்டவணை-2 இனை அவதானிக்கின்ற போது வடமாகாணம் உயர்தரப் பரீட்சையில் மாகாணத் தரவரிசையில் முன்னணியில் இருப்பதனை அவதானிக்கலாம். அத்துடன் உயர்தரத்தில் பல்கலைக்கழகத் தெரிவுகள் ணு புள்ளி அடிப்படையில் இடம் பெறுவதால் வினாத்தாள்களின் தன்மை பற்றி ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளாக வடமாகாணம் கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் முதலாம், இரண்டாம் நிலைகளையே பெறுகின்றது. அதேவேளை கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் வடமாகாண மாணவர்கள் தேசியமட்ட முதல் பத்து நிலைகளில் குறிப்பிடத்தக்களவு இடங்களைப் பெறுகின்றனர். எனவே வடமாகாண மாணவர்கள் உயர்தரத்தில் தமது திறமைகளைத் தேசியமட்டத்தில் வெளிக்காட்டி வருகின்றனர்.இவை பாராட்டப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.

இதேவேளை தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற கற்றல் சார் போட்டிகளிலும் வடமாகாண மாணவர்கள் தமது சாதனைகளைப் படைக்கத் தவறுவதில்லை. அண்மைக் காலமாக கணித , விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் வடமாகாண மாணவர்கள் தேசியத்தையும் தாண்டி சர்வதேசரீதியில் பதக்கங்களைப் பெற்று தமது பாடசாலைக்கும் , வடமாகாணத்திற்கும் , இலங்கைக்கும் சர்வதேச ரீதியாகப் பெருமைகளைத் தேடித் தருகின்றார்கள். அத்துடன் தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி, சமூகவிஞ்ஞானப்போட்டி போன்றவற்றில் வடமாகாண மாணவர்கள் தேசிய மட்டத்தில் சாதனை படைக்கிறார்கள்.

எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றது என்பது தனியே க.பொ.த. சாதாரணதர மாகாண தரவரிசையின் அடிப்படையில் மாத்திரம் கூறிவிட முடியாது. அத்துடன் இவ் தர நிலைக் கணிப்புக்கள் புள்ளிவிபரவியல் ரீதியாகப் பெறுமதியற்றவை. வடமாகாணம் கல்வியில் படிப்படியாக முன்னேறி வருகின்றது என்பதே உண்மையாகும்.

அத்துடன் கல்வியறிவில் பரம்பரைக்காரணிகளின் தாக்கம் கணிசமானளவு காணப்படுகிறது என கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் காரணமாகவும் ஏனைய பொருளாதாரக் காரணிகளுக்காகவும் பல புத்திஜீவிகள் வடமாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளனர்;. அவர்களின் பிள்ளைகள் இன்று புலம்பெயர் தேசங்களில் சாதனையாளர்களாக மிளிர்கின்றனர். அவர்களின் வெளியேற்றம் இன்றேல் இன்று வடமாகாணக் கல்வி வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே கல்வியியலாளர்களும் , சமூக ஆர்வலர்களும் முதலிலே நாம் கல்வியில் பின்னடைகின்றோம் என்ற கருத்தை கை விட வேண்டும். நாம் கல்வியில் பின் தங்கியிருக்கிறோம் என்பது எம் மீது திணிக்கப்படுகின்ற ஒரு கருத்தியல். நாம் கல்வியில் பின் தங்கியிருக்கின்றோம் என்ற கருத்தியல் எம்மை ஒரு பின் தங்கிய சமூகமாக, அடிமைப்பட்ட சமூகமாகக் காட்டுவதன் மூலம் வடமாகாணத்தின் மக்கள் இனி உரிமைகள் தொடர்பாகச் சிந்திக்க கூடாது என்பதற்காக உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட கருத்தியல் ஆகும். எனினும் நாம் எமது கல்வி நிலையினை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது என்ற கருத்தியலைக் கைவிடுவதே ஆகும்.


இராமச்சந்திரன் நிர்மலன் (புற்றளை)

ஆசிரியர், வவு/ கனகராயன்குளம் மகா வித்தியாலயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More