ஜப்பானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் சனாயே தக்காய்ச்சியின் மிதவாத ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக ஜப்பான் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான நிக்கேய் 225 சுமார் 5 சதவீதம் உயர்ந்து 56,900 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. மேலும் இந்த குறியீடு 56,000 புள்ளிகளைக் கடந்தது வரலாற்றில் முதல் முறையாகும்.
தக்காய்ச்சி அரசு செலவினங்களை அதிகரிப்பதுடன் வரிகளை குறைக்கும் பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்க உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கியதால் பங்குச் சந்தையில் வலுவான உயர்வு ஏற்பட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்தி – ஜப்பான் பொதுத் தேர்தல்: சனாயே தக்காய்ச்சி வரலாற்று வெற்றி
இதனுடன் ஜப்பானிய யென் நாணயமும் 0.33 சதவீதம் வலுவடைந்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 156.72 யெனாக பதிவாகியுள்ளது.
நாட்டின் நிதிக் கொள்கைகள் நீடித்து நிலைத்திருக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும், தேவையான முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தக்காய்ச்சி தெரிவித்துள்ளார்.