ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்துக்கு முன்னதாக தங்களின் இயற்கை எரிவாயு சேமிப்பை நிரப்ப போராடி வரும் வேளையில், இந்த குளிர்காலத்தில் இங்கிலாந்தில் உள்ள வீடுகள் அதிக எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை எரிவாயு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு விலை மெகாவாட் மணி நேரத்திற்கு (MWh) 75 யூரோக்களைத் தாண்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த விலையாகும். அதேபோல, இங்கிலாந்தின் இயற்கை எரிவாயு விலையும் ஒரு தெர்மிற்கு (therm) 185 பென்ஸைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கேபிடல் எகனாமிக்ஸ் ஆய்வாளர் ஹமத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதனால் எரிவாயு விலை இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 யூரோக்களைத் தாண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிக விலை காரணமாக ஐரோப்பிய நாடுகள் கோடைகாலத்தில் எரிவாயுவைச் சேமிக்கத் தவறியதால், தற்போது வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவே எரிவாயு சேமிப்பில் உள்ளது.
இங்கிலாந்தில் இந்த குளிர்காலத்திற்கு மிகக் குறைந்த அளவே எரிவாயு சேமிப்பில் இருப்பதாக பிரிட்டிஷ் கேஸ் (British Gas) நிறுவனத்தின் உரிமையாளரான சென்ட்ரிகா (Centrica) அமைப்பின் தலைவர் கிறிஸ் ஓ’ஷியா கவலை தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதல் எரிசக்தி கட்டண வரம்பு 4% அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஒரு சாதாரண குடும்பத்தின் சராசரி ஆண்டு கட்டணம் £1,723ஆக உயரும்.
மேலும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த கட்டணம் மேலும் 9% உயரக்கூடும் என்று கார்ன்வால் இன்சைட் (Cornwall Insight) கணித்துள்ளது.
ஒக்டோபர் முதல் எரிசக்தி கட்டணங்களில் இருந்து மதிப்பு கூட்டு வரியை குறைக்கப் போவதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலைமை “கடுமையானது. ஆனால், பேரழிவு தரக்கூடியது அல்ல” என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் பொருளாதார நிபுணர் ஏஞ்சல் தாலவெரா தெரிவித்துள்ளார். குளிர்கால காலநிலை மிதமாக இருந்தால் எரிசக்தி தேவை குறைந்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.