பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில் முதல் முறையாக அமைக்கப்பட்ட இந்துக் கோவிலை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மகாந்த் சுவாமி மகாராஜ் வேத மந்திரங்கள் முழங்க அண்மையில் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த ஆன்மீகப் பிரதிநிதிகள் குழுவினர் பாரிஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்தபோது, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண் ஊழியர்கள் இவ்வாறு நீக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈபிள் கோபுரப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனம், பெண்களுடனான தொடர்புகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விஜயத்தை ஒழுங்கமைக்குமாறு இந்துக் குழுவினர் கோரியதை ஒப்புக்கொண்டுள்ளதுடன், இத்தகைய நிபந்தனைகளை நிர்வாகம் ஏற்றிருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளைத் தீவிரமாகக் கருத்திற்கொள்வதாகவும், இதனால் ஏற்பட்ட வேதனை மற்றும் சிரமங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் பாரிஸ் BAPS இந்துக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் தொடங்கப்படும் எனப் பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகோயர் தெரிவித்துள்ளார்.