செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சட்டத்தின் வரையரை! | சிறுகதை | லாவண்யா ஜெகன்நாதன்

சட்டத்தின் வரையரை! | சிறுகதை | லாவண்யா ஜெகன்நாதன்

11 minutes read

அதிகாலையில் ஒருவித படப்படப்புடனே எழுந்து குளித்துவிட்டு வேலையைத் தேட தயாராவாள் மது.

தங்ககுவதற்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர்கள். சாலையோர கடைகளுக்கு பக்கத்தில் தான் இவர்களது வீடு. தனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் முதலில்  பெற்றோர்களை வாடகை வீட்டில் குடியேற்றிட வேண்டும் அம்மா அப்பாவை வேலைக்கு போகவிடாமல் இனி எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் எனக்காக உழைத்த உழைப்பிற்கு உங்களை ராஜா ராணியைப் போன்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சத்தம் போட்டு கத்தி சொல்ல வேண்டும் என்பது அவளின் ஆழ்மனது எண்ணம்.

அரசு நடத்திய வேலை வாய்ப்பு தேர்விலும் வெற்றி பெற்றுவிட்டாள். எப்போது பணியில் சேர ஆணை வரும் என்ற ஏக்கத்தோடு அந்த வேலைக்காக காத்திருந்தாள்.

அதே நேரம் காலத்தையும் நேரத்தையும் வீணாக செலவு செய்யவில்லை. அரசு வேலை கிடைக்கும் வரையில் தனியார் நிறுவனத்தில்  வேலையை தேடிக் கொள்வது தான் சரி என்று தனியார் நிறுவனத்தில் வேலை தேடினாள். அவள் நினைத்ததைப் போன்றே மாதம் ரூ15,000 சம்பளத்தில் மதுவிற்கு வேலையும் கிடைத்துவிட்டது.

தனது முதல் மாத சம்பளப் பணத்தைக் கொண்டு அம்மா அப்பாவிடம் கொடுத்து ஆசிபெற்றதும் இந்த பணத்தை வைத்து முதலில் வாடகை வீடு ஒன்றை பார்த்துவிட வேண்டும்.

“நாளை இதே நேரத்தில் நாம் புதிய வீட்டில் இருக்க வேணும்ப்பா” என்று அப்பா தங்கமணிக்கு அன்பு கட்டளையிட்டாள் மது.

தங்கமணியும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு வாடகை வீட்டை பிடித்து குடித்தனம் போனார்கள். குடும்பத்திற்கே பெரும் நிம்மதி மகிழ்ச்சி. சாலையோர வாழ்க்கையில் இருந்து நல்ல மாற்றத்தை பார்க்கிறார்கள் அல்லவா.. அதன் மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாதது. மதுவின் தாய் வள்ளி அழுதாள்.

அப்போது மது “அம்மா  இப்போ ஏன் அழற  இந்த வீடு இப்போதைக்கு சும்மா தான்.  எனக்கு மட்டும் அரசு வேலைக்கு உத்தரவு வரட்டும் நீ அரசாங்க அதிகாரி வீட்ல  இருப்ப.. உன்னோட பொண்ணு..  அரசாங்க அதிகாரி அடுத்த ரெண்டு வருஷத்துல சொந்தமா வீடு வாங்கிட்டு நாம அங்க போறோம். அங்க போய் அழவறதுக்கும் கண்ல கொஞ்சம் தண்ணிய வச்சுக்கோ” என்று சொல்லி சிரித்தாள்.

தனது      மகிழ்ச்சியை வெளிக்காட்டினாள். தங்கமணியும் வள்ளியும் மதுவை கட்டிப்பிடித்து அழுதார்கள். ஒருவழியாக அவர்களை சமாதானம் செய்தாள் மது.

என்னதான் தனியார் நிறுவனத்தில்  வேலை கிடைத்திருந்தாலும் மதுவிற்கு எண்ணம் மொத்தமும் அரசு வேலையின் மீது தான் இருந்தது.ஏன் என்றால்  மதுவின் முதல் கனவு சொந்த வீடும் தான். படிக்க முடியாத சூழ்நிலையிலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு படிப்பின் மீது தனது முழு கவனத்தை காட்டினாள். படுப்பதற்குக்கூட இடமில்லாத கவலை மதுவின் மனதில்  வெறியாக மாறியது எப்பொழதும் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் ஆனாலும் கஷ்டத்தை பார்த்தால் நம்மால் சாதிக்க முடியாது என்ற மனநிலை மதுவிடம் மிக வலுவாகவே இருந்தது.

தங்கமணியும் வள்ளியும்  இருவரும் கட்டிடக் கூலித் தொழிளாளி கள். இவர்களின் தலைமுறைக்கே சொந்த வீடு கிடையாது எல்லாம் சாலையோரத்தில் தான். இருவரும் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சாப்பாட்டிற்கே செலவாகும் இதில் எங்கிருந்து வாடகை வீடும் பிடிக்க முடியும்?

இதில் இருவருக்கும் பெண்  குழந்தை வேறு பிறந்துவிட்டதால் இன்னும் நொந்து போனார்கள். ஆண் பிள்ளை என்றால் ரோட்டில் தைரியமாக தனியாக படுக்க வைக்கலாம் நாளைக்கு நம்மையும் பாத்துக்கும் ஆனால் பெண் பிள்ளையை நாம தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கவலையின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இதை பற்றி யோசித்ததிலேயே குழந்தைக்கு இரண்டு வயதாகி விட்டது. இன்னமும் பெயர் வைக்கவில்லை தங்கமணியும் வள்ளியும் ஒருவழியாக அவர்களின் மனதை தேற்றிக்கொண்டு மது என பெயர் வைத்தார்கள். மதுவும் வளர்ச்சியடைய அரம்பித்தாள்.

பெண் பிள்ளையை தனியாக ரோட்டிலும் விடமுடியாது சித்தால் வேலை நடக்கும் இடத்திற்கும் கூட்டிச் செல்ல முடியாது என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது தான் அரசு பள்ளிக்கூடம் வள்ளியின் கண்களுக்கு தென்பட்டது. கொஞ்ச நாளைக்கு இந்த பள்ளிக்கூடத்துல விடலாம் அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிப்போம்னு நெனைச்சி தான் முதன் முதலில் மது   பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள்.

மத்திய உணவு அரசு பள்ளியிலேயே கிடைப்பதால் எந்த பிரச்சனையும் பிள்ளைக்கு வராது. வள்ளியும் தங்கமணியும்  காலை வேலைக்கு செல்லும் போது மதுவை பள்ளிக்கூடத்தில் விடுவதும்  மாலையில் வள்ளி வந்து மதுவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதுமாக இருந்தார்கள்.

தங்கமணிக்கும் வள்ளிக்கும் அப்போது தான் தெரிந்தது தங்களுக்கு இல்லாத சொந்த வீடு தனது மகளுக்கு கிடைக்க வேண்டும் அது அவள் படிக்கும் கல்வியால் மட்டுமே அது சாத்தியம்.. சத்தியம் என உணர்ந்தார்கள். மதுவின் கல்விற்காகவே இரவு பகல் என பாராது கடுமையாக உழைத்தார்கள் ஓடாய் தேய்ந்தார்கள்.

மதுவின் வயதும் வளர்ச்சியும் அதிகமாக  பள்ளியில் இலவச மாணவிகள் தங்கும் விடுதியிலேயே அவளை தங்கவைத்து விட்டார்கள். விடுமுறை நாட்களில் கணவன் மனைவி இருவருமே சென்றுவிடுவார்கள் மதுவை பார்க்க.

தங்கமணி அடிக்கடி சொல்வது “அப்பா அம்மா என்ன வராங்க ஏதோ பார்த்துட்டு போறாங்க நம்ம மேல பாசமே இல்லையோனு மட்டும் நெனைக்காதடா எங்க உசுரே நீ தான் உன்ன ரோட்ல படுக்க வைக்க என்னால முடியாதுடா சாமி அதான் உன்ன பள்ளிக்கூட விடுதிலேயே தங்கவிடுறோம்டா. உனக்கு நாங்க ஏன் மதுனு பெயர் வச்சோம்னு தெரியுமா? எங்களோட மொத்த ஆசையும் நீ தான்டா நாங்க எப்படியெல்லாம் வாழனும்னு நெனைச்சி ஒவ்வொரு நாளும் வாழ்ந்துட்டு இருக்கோமோ அத நீ உன் நிஜ வாழ்க்கையில வாழனும் அத நாங்க இரண்டு பேர் பார்க்கும்போதே எங்க மனசுல அது  போதை ஏறனும் அதுக்காகவே தான் உனக்கு மதுனு பெயர் வச்சோம்டா மது!”

அரசின் இத்தகைய நலத்திட்டத்தால் தான் எத்தனையோ ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.

இன்னும் ஆங்கில வழிக்கல்வி   நல்ல வகுப்பறை தங்கும் விடுதி என ஏழைகளுக்காக அரசு செய்தால் அது அவர்களுக்கான வரப் பிரசாதமாக மாறும் என்பதில் ஐய்யமில்லை..

பெற்றோர்களின் மனநிலையும் கஷ்டத்தையும் நன்கு உணர்ந்தவள் அவளின்  தந்தை சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளின் காதுகளில் அவை கேட்டுக் கொண்டே தான் இருந்தன. மது நல்ல பண்பான பெண்ணாகவே வளர்ந்தாள்.

வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக போனது இருந்தாலும் அரசு வேலை பற்றின எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

அரசு வேலைக்கு தேர்வெழுதி ஒராண்டு முடிய போகிறது ஆனாலும் மதுவிற்கு மட்டும் எந்த பணிக்கான உத்தவும்  வரவில்லை. ஆனால் அவளுடன் தேர்வெழுதிய நபர்களுக்கு நேர்முக தேர்வும்  பகுதி விசாரணையும் முடிந்து அரசு பணிக்கே சென்று விட்டார்கள்.

இந்த தகவல் மதுவிற்கு கிடைக்க என்ன செய்வது என்று தெரியாமல் அழுதாள். படுக்க இடம் இல்லாத சூழ்நிலையில் வெறும் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவளாச்சே இந்த தகவலை அவளால் எப்படி  ஏற்றுக்கொள்ள முடியம்?

யாரிடம் சென்று கேட்பது என்ன செய்வது இதை எப்படி அப்பா அம்மாவிடம் சொல்வது என குழப்பத்தில் ஆழ்ந்தாள்.. கத்தினாள்.. சரியாக சாப்பிடாமல் தூங்கமுடியாமல் தவித்தாள்.

அவளின் மனம் மலையை சுமப்பதைப் போன்று கனத்ததிருந்தது. சரியென நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து விடலாமா என்றாலும் அதற்கு பணம் அதிகளவில் தேவைப்படும் என்ன செய்வது என்ற குழப்பதில் இருக்கும் போது கல்லூரி தோழி  அமுதா ஞாபகத்திற்கு வர அவளிடம் உதவி கேட்டாள்.

ஏனென்றால்  அமுதாவின் சகோதரன் அரசுத்தரப்பு  வக்கீல். அவர் நமக்கு உதவி செய்யாமல் விடுவாரா என்ன? இருந்தாலும் அவருக்கு பணம் தருவது தானே முறை நம்மிடமும் பணமில்லை அவரிடமும் நேரடியாக உதவி எப்படி கேட்பது என்று சிந்தித்தாள்.

பிறகு யாரோ ஒரு வக்கீலை பார்த்து வாதாட வைப்பதை விட அமுதாவின் அண்ணாவிடமே உதவி கேட்பது தான் சரி என்று அமுதாவிடம் நடந்தவற்றை சொல்லி அழுதாள்.

“அமுதா.. என்னிடம் அவ்வளவாக பணமில்லைடி என்னால் முடிந்த பணத்தை தருகிறேன் நீ தான் எனக்கு இப்பொழுது உதவ வேண்டும். உன்னைத் தவிர வேறு யாராலையும் எனக்கு உதவ முடியாது அமுதா” என்று கெஞ்சினாள்.  அதற்கு அமுதாவும் அழைப்பு கொடுக்க உடனே  அமுதாவின் வீட்டிற்கு சென்றாள் மது.

அமுதா அவளின் அண்ணன் முரளி அம்மா இருந்தார்கள் மதுவை பார்த்ததும் “வாம்மா எப்படி இருக்க அப்பா அம்மா எல்லாம் சவுக்கியம் தானே என்று  அன்போடு நலன் விசாரித்தார்”  அமுதாவின் அம்மா.

மது சிரித்துக் கொண்டே “நல்லா இருக்காங்கம்மா”

“சரி மது உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் துணையா நாங்க இருப்போம். நீ எதுக்கும் பயப்படாம இருந்தாவே போதும் சரியா”

“ம்ம்ம் சரிமா…”

“நீயும் என் பொண்ணு தான் உன்னை அப்படியா  விட்டு விடுவோம் சொல்லு. இத நீ எங்க கிட்ட முதல்லியே சொல்லிருந்தா இன்னேரம் நீ அரசு உத்தியோகத்துல இருந்திருப்படி..  சரி விடு பார்த்துக்கலாம். எல்லாம் நேரம் சரியா இருந்தா அதுவே தானா நடக்கும்.”

“என்னம்மா எனக்கா நல்லது நடக்கபோகிறது?”

“நான் எவ்வளவு கனவோடவும் நம்பிக்கையோடும்  அரசு வேலை கிடைச்சிடும்னு இருந்தேன் ஆனா இப்படியாகிப் போச்சேமா” என மனக்குறையை சொன்னாள்.

“அமுதா உடனே ஏய் மது ஏன் அழுவுற அதலாம் ஒன்னுமில்லை அழாத எல்லாத்தையும் நான் பார்த்துக்றேன் சரியா” என்றாள்

அதன் பிறகு அமுதாவின் அண்ணன் முரளி பேசினான் “மது நீ அரசு தேர்வுல பாஸ் பண்ணல அந்த மார்க் சீட் அப்றம் நேர்முக தேர்வுக்கு போன லெட்டர் இதலாம் இருக்கா?”

“ம்ம்ம்.. இருக்குண்ணே”  என்று எல்லாவற்றையும் கொடுத்தாள்.

அதை முரளியும் வாங்கி பார்த்து சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றான். மதுவிற்கு ஒன்றும் புரியவில்லை ஏன் எதுவுமே சொல்லாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார் என்று யோசித்தாள் மனத்தில் குழப்பம் அதிகமானது.

சிறிது நேரம் கழித்து பெரிய சட்டப்புத்தகத்தையும் ஒரு நோட்டையும் கொண்டு வந்து வைத்து அதை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன முரளி ஏதாச்சும் சொல்லுவனு பார்த்தா புக்க எடுத்துட்டு வந்து படிக்குற? ஏதாச்சும் பேசு.. மது அழுதுக்கிட்டே இருக்கா பாருடா” என அமுதா சொன்னாள்

“ஏய் லூசு சட்டம்தெரியாம பேசாத சரியா..!”

“மது உங்க சாதிக்கு எத்தன விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்திருந்தாங்கனு உனக்கு தெரியுமா?”

உடனே அமுதா  “ஏய் அண்ணா அவளுக்கு உதவி பண்ணுவனு பார்த்தா  அவள எந்த சாதி விழுக்காடு மண்ணாகட்டினு கேட்டுக்கிட்டு இருக்க?”

“ஏய் அமுதா குறுக்க பேசாத நான் மதுவ மட்டும் தான் கேட்கிறேன்.. நீ உன் வாய்ய மூடிக்கோ நாங்க பேசி முடிக்கிற வரைக்கும் நீ வாய்ய திறக்கவே கூடாது சரியா” என முரளி அமுதாவிடம் கடிந்துக் கொண்டான்

“சரிடா என் வாய்ய மூடிக்கிறேன் நீயே பேசு”

“நீ சொல்லு மது..”

“இந்தியா முழுக்க 460 இடங்கள்  அண்ணா”

“சரி உன் மார்க் 200க்கு 177ல”

“ஆமாம்ண்ணா….”

“ம்ம்ம்ம்…..!!!!!!!. சரி அரசு வேலைக்கு  நீ எடுக்கிற மார்க் பர்ஸ்னல் இன்டர்வியூ மார்க் அப்றம் இடஒதுக்கீடு இதவச்சி தானே   தேர்வு செய்வாங்க?”

“ஆமாண்ணா  இதவச்சிதான்…”

“ம்ம்ம் சரி நீ என்ன சாதி?..”

“அண்ணா அது உங்களுக்கே தெரியுமே?”

“எனக்கு தெரியும்மா ஆனா உனக்கு வேலை தர அரசு அலுவக ஊழியர்கள்  கேட்கிறாங்களே?”

“அண்ணா என்ன சொல்ல வர்றீங்கனு கொஞ்சம் தெளிவா எனக்கு புரியும்படி சொல்லுங்க!”

“மது அரசு சட்டத்தின்படி அரசின் உயர் பதவிகளுக்கு வருபவர்களின் ஆளுமைத் திறன் அரசு இயந்திர பணியில் நேர்மை அதிகார துஷ்பிரயோகம் செய்யாமை, அரசு அலுவலர்களுடன் ஓன்றிபோகுதல்  இது போன்ற சில விஷயங்களை   ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகே தான் வேலைனு சட்டம்  சொல்லிருக்கும்மா”

“அது சரிண்ணா இதுக்கும் என் வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?”

“அது வந்து மது பொது பிரிவினர் அதாவது உயர் வகுப்பினர்களுக்கு இச்சட்டம் பொருந்தும் ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பு சமூகத்தினர்களுக்கு தான் இந்த தகுதி சோதனை சட்ட மசோதா இருக்கு”

“என்ன அண்ணா சொல்றீங்க?? ஏன் குறிப்பிட்ட சாதி மக்களுக்கு மட்டும் இந்த மாதிரியான சட்டம் இருக்கு?”

“மது 1987ல் ஒரு வழக்கு தொடர்ந்தார்கள். அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு சார்ந்த மக்களுக்கு ஏன் அதிகாரம் கொண்ட உயர் பதவிகள் வழங்கப்படுவதில்லை அப்படி உயர் பதவி கிடைத்தாலும் அதற்கான பணி ஆணை கிடைக்க இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளதே ஏன்.. அரசின் அடிமட்ட வேலைகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும் அரசிற்கு  உயர் பதவிகளுக்கு வழங்கப்படுவதில்லை ஏன்?  ஆகையால் அரசின் இந்த திட்ட மசோதாவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வாதாடிருக்காங்க மது”

“அதற்கு கிளை நீதி மன்றம் உயர்நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றியது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போதும் இதே கோரிக்கைகளை தான் முன்வைத்து வாதாடினார்கள்.

இந்த வழக்கை முழுமையாக விசாரணை செய்த நீதிபதிகள் ஒரு தீர்ப்பை கொடுக்கிறார்கள் அது என்னவென்றால்….!

தாழ்த்தப்பட்ட வகுப்பின மக்கள் அரசின் உயர் பதவிகளில் இடம் பெற வேண்டுமானால் அவர்களுக்கு முதலில் அந்த பதிவில் செம்மையாக செயல்படும் அளவிற்கு கல்வியறிவு திறன் உள்ளதா என்றும் உடல் தகுதி மற்றும் அப்பதவியின் அதிகாரத்தை வைத்து துஷ்பிரயோகம் செய்வார்களா என்றும் அவர் அந்த பதவியை வகிக்கும் முழு தகுதியுடையவர் தானா என்றும் பார்க்க வேண்டும்.

இடஒதிக்கீட்டின் படி அந்த அலுவலக ஊழியார்களுக்கும் இந்த வகுப்பினர் அங்கே பணியாற்ற  சம்மதம் தெருவிக்க வேண்டும்   ஆனால் அலுவலக ஊழியர்கள் யாரெனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்  வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தால் அந்த இடஒதிக்கீடு காலிப்பணியிடமாகவே அறிவிப்புக் கொடுத்திட வேண்டும் அந்த காலி பணியிடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதிக்கீடு எனவும் மற்ற சாதி வகுப்பினர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வழங்கக்கூடாது. அது முற்றிலும்  காலி பணியிடமாகவே அறிவிக்கப்பட வேண்டும்.

அந்த அலுவலகத்தை தவிர்த்துவிட்டு வேறுபகுதியில் இயங்கும்  அரசு அலுவலங்களின் இடஒதுக்கீடு உள்ளதோ அங்கே எந்த அரசு ஊழியரும் எவ்வித கருத்தும் கூறவில்லை என்றால் அங்கே அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு அப்பணியை வழங்கலாம்.

அரசு ஊழியர்களின் முழு சம்மதம் இருந்தல் மிக அவசியமானது. அந்த வேலையை அவர்களுக்கு வழங்க அரசிர்க்கு பரிந்துரை செய்ய ஒர் சுற்றறிக்கையை தரவேண்டும் இவை முழுமையாக கிடைத்தாப் பிறகு அந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகே  தான்  தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அப்பதவியை வழங்க வேண்டும்.

இவ்நடவடிக்கைகள் குறைந்தது ஆறு மாதகால வரையிலும் எடுத்துக் கொள்ளலாம்  என உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்திருக்கு மது.”

இதைக் கேட்டதும் மதுவிற்கு கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.

“ஏன் அண்ணா நாங்க என்ன பாவம் பண்ணோம் ஏன் எங்களுக்கு மட்டும் இதுமாதிரியான வரைமுறை உள்ளது. நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா என்ன? ஏன் மற்றவர்கள் எல்லோருக்கும் இருப்பதைப் போன்று தானே எங்களுக்கும் அந்த கடவுள் கொடுத்திருக்கான். அப்றம் ஏன் இந்த மாதிரியான கொடுமைண்ணா.. நாங்க உயர் பதவிக்கு போகுனும்னா மட்டும் அவங்கள கேக்கனும் இவங்கள கேக்கனும்னு சொல்ற சட்டம் உயர்சாதி வகுப்பினர்களுக்கு ஏன் இதே கேள்விகளை கேட்பதில்லையே ஏன்?

ஏன் அவர்களுக்கு மட்டும் எந்தகேள்வியும் இல்லாமலும் அதை எங்கிட்டையும் எதுவும் கேட்கமாட்டாங்க நேர வேலைய தூக்கிக் கொடுத்திடுவாங்க. ஆனா  நாங்க போய் வேலைனு கேட்டால் மட்டும் சாதி படிப்பு அது இது என்று கேட்பதா?

இப்படி இவங்ககிட்ட  பிச்சையெடுத்தால் தான் அரசு வேலை எனக்கு கிடைக்கும் ன்னா  எனக்கு அந்த வேலையே வேண்டாம் அண்ணா….!!”

“அச்சோ மது இப்படி அவரசப்பட்டு எதுவும் மாறிடப்போறது இல்ல இது நடைமுறையில இருக்கிறது தான் கொஞ்சம்  பொறுமையா நான் சொல்றத கேளு சரியா!!!”

“நான் ஏன் பொறுமையா இருக்கனும் சாதாரண வேலைக்கு மட்டும்ன்னா ஊருக்கு முன்னாடி நீங்க தான் வேணும்னு கூப்பிடுறது அதிகார பதவினா மட்டும் தூரம் ஒடுனு அடிச்சி விரட்டுறது தான் சட்டமா என்ன?

சாக்கடை அள்ளவும் டீ காபி வாங்கி தரவும் ரோடு சுத்தம் பண்ணவும் கார் ஒட்டவும் குப்பை அள்ளவும்  மட்டும் முன்னுரிமை கொடுத்து நீங்க தான் எங்களுக்கு வேணும் என்று கூவிக்கூப்பிடும் சட்டம் ஏன் அரசின் உயிர் பதவிகளுக்கு இப்படியான சட்டம் வகுத்துள்ளது?

நாங்கள் மன்னராட்சி, வெள்ளைக்காரன் ஆட்சி மற்றும்  சுதந்திர ஆட்சி இப்படினு ஆயிரம் ஆண்டு காலமாக அடிமைகளாவே  தான் இருக்கிறோம் இன்னமும் இருக்க வேண்டுமா என்ன?

நாங்கள் இந்த அரசிற்கு என்ன துரோகம் செய்தோம் அண்ணா…!”

“நீங்க எதுவும் செய்யல மது.. நீ கேட்கும் ஒவ்வொரு கேள்வியும்  சரி தான்.. ஆனால் மது சட்டம் இப்படி தானே வரையரை பண்ணிருக்கு?”

“என்ன சட்டம் இது?  டாக்டர் அம்பேத்கர் இப்படி ஒரு சட்டத்தை நிச்சயம் இயற்றியே இருக்க மாட்டார். என்னென்றால் அவரும் என்னை போன்று கஷ்டப்பட்டவர் மேல் சாதி ஆதிக்கத்தால் அடக்கப்பட்டவர் ஆனாலும் அவரின் விடா முயற்சியால் இந்த இந்தியாவிற்கே சட்டத்தை எழுதிக் கொடுத்தவர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரை வேண்டாம் என ஒதுக்கும் சட்டம் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எழுதிய சட்டத்தை மட்டும் வைத்துக் கொள்வது மட்டும் நியாயமானதா என்ன?

இதிலேயே தெரிகிறதே எங்களின் உழைப்பு மட்டுமே தேவையே தவிர எங்களின் உயர்வான வாழ்க்கை இவர்களுக்கு முக்கியமில்லை அது பற்றின கவலையும் அவர்களுக்கில்லை அண்ணா..!”

“மது கொஞ்சம் பொறுமையா இரு இது சட்டம் காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொண்டே வரும்”

“என்ன சொன்னிங்க அண்ணா காலத்திற்கு ஏற்றார் போல் மாறுமா?????   எனக்கு சிரிப்பு தான் வருகிறது  84 வருஷம் ஆகுது சுதந்திரம் பெற்று அப்போழுதில் இருந்து இப்போது வரை மாறாத சட்டமா  இப்போ உடனே மாறிடப் போகுது!

என்னோட பள்ளி கல்லூரி  காலத்துல உதவித்தொகை வரும் அப்போ எல்லா பிள்ளைங்களும் உட்கார்ந்துட்டு இருப்பாங்க என் டிச்சர் மட்டும் அரசின் தத்துக் குழந்தையே உனக்கு பணம் வந்திருக்கு போ என்பார்கள் நான் தலைக்குனிவுடன் போவேன் மற்ற பிள்ளைங்கலாம் சிரிக்கும்.

அந்த சிரிப்பு ஏனு எனக்கு இப்போதான் புரியுது அண்ணா. எங்களோட வளர்ச்சி இங்க இருக்கிற மேல் சமூகத்துக்கு பிடிக்கல எங்கள அடிமையாவே இருக்க வைக்க எங்கள அடக்கியும் அவமானம் செய்தும் எங்களை ஒடுக்கியே வைக்க நினைக்கிறார்கள்.

எங்களுக்கான இடஒதிக்கீடு ஏனு எனக்கு இன்னைக்கு தான் நல்லா  புரியுது அண்ணா”

“ம்ம்ம்.. நல்லது மது.. சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு உயர்வான பதவி கிடைக்க மட்டும் இரண்டு வருஷம் ஆகலாம் இல்ல ஏழு மாதத்திலும் கிடைத்திடலாம் ஆனால் உன் தேர்வின் மதிப்பிடு  மாநிலத்தில் எல்லா அரசு அலுவலகத்திற்கும் அனுப்புவார்கள்.

எந்த அலுவகத்தில் இருந்து உனக்கு பச்சைக்கொடி வருகிறதோ அங்கோ தான் உனக்கு வேலையும் கிடைக்கும். இந்த நடவடிக்கை முறைகள் குறைந்தது ஒரு வருடம் கூட ஆகலாம் அதற்கு மேலும் ஆகலாம்! அதுவரையிலும் நீ பொறுமையாக தான் இருக்க வேண்டும்.”

“அப்போ அண்ணா மற்ற சமூகத்தினர்களுக்கு எத்தனை மாதம் வரை இந்த நடவடிக்கை முடியும்?”

“அது ஆறு மாதத்திற்குள்ளே முடிந்துவிடும் மது”

“சரி அண்ணா இன்னும் இரண்டு மாதங்கள் பார்போம் இல்லையேல் சட்டத்தின் வழியிலேயே சென்று நீதி கேட்போம்”

“அய்யோ மது அதலாம் ஒன்றும் தேவையில்லை நீ அடுத்த தேர்வுக்கு தயாராகு அதுவே போதும் எனக்கு”

“நான் ஏன் அண்ணா  அடுத்த தேர்வுக்கு தயாராகனும்?”

“மது நீதிமன்றம் போய் உனக்கு வேலை கிடைச்சாலும் அது சாதாரண வேலையாதான் இருக்கும் அந்த வேலையிலும் உன்னை நிம்மதியா வேலை செய்யவும் விடமாட்டார்கள்.

இதைப் போன்றே 2009ல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூக பெண் அரசு தேர்வில் வெற்றிப் பெற்று துணை ஆட்சியாளராக  பணியில் அமர்த்தப்பட்டாள். நான்கே மாதத்தில் அதே அலுவலகத்தில் சாதாரண பணியில் மாற்றி விட்டார்கள். அவளும் இந்த மாற்றத்தையும் அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொண்டாள். அந்த வழக்கு நீதிமன்றத்திலேயே முடிந்துப் போனது. இதை  மனதில் வைத்து தான் நான் சொல்கிறேன்.

உன்னை அடக்குவது சட்டமோ அரசோ இல்லை. உனக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அதிகாரத்தால்  தடுக்கிறார்கள்.  அதில் பணிபுரியும் ஊழியர்கள் தான் அவர்களின் முன் போராடு.. எதிர்த்து நில்.. உன் இருப்பிடத்தை  காட்டிக்கொள்.

நீ அரசாங்க உயர் பதவியில் அமர்ந்தால் உன் சமூகத்தினரும் உன்னை பின் தொடர்வார்கள். இது உன் தனிப்பட்ட  முன்னேற்றம் மட்டுமில்லை உன் சமூகத்தின் முன்னேற்றம்..”

“மிக சரியா சொன்னிங்க அண்ணா..

தாழ்த்திப் பேசுவது மனித இயல்பு தாழ்ந்தே போ என்பது ஆணவத் திமிர்..

இதை எதிர்த்து போராடுவேன்.. அவர்களின் முன் நான் மட்டுமல்ல என் மொத்த சமூகமே உயர்ந்து நிற்கும்.. ஒருபொழுதும் மண்டியிடமாட்டோம்.

அண்ணா எனக்கு அரசு வேலை கிடைக்கிவில்லை என்றாலும் பரவாயில்லை எனக்கான நியாயத்தை சட்டமே தரட்டும். நீங்கள் வழக்கை பதிவு செய்யுங்கள்..”

“சரி மது உனக்காக அல்ல.. உன் சமூகத்திற்காக இதை நான் செய்கிறேன்.

மது உனக்கு நான் சொல்ல மறந்துட்டேன் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்துல மட்டும் 2,00,000 லட்ச காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கு. அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதிக்கீடு அது.”

மதியின் பிழை சாதியை தீர்க்குமோ

மனிதனின் சதி சட்டம் தீர்க்குமோ

பழி போக்க கடவுள் வருவாரோ

தாழ்ந்தவனுக்கு நீதி கிடைக்க கரம் தான் நீந்தி வருமா..

தீண்டாமை எனும் போதே தீட்டாகிப் போனதே என்று சொல்லாமல்  மனிதனாக வாழ கற்றுக் கொள்வோம்.. சட்டத்தின் நேர்மையான வழியில்..

 

(இக்கதை என் கற்பனையும் உண்மையும் கலந்தவை. இதில் யார் மனதையாவது புண்படும்படி வாக்கியம் இருந்தால் என்னை மன்னியுங்கள்)

 

– திருமதி லாவண்யா ஜெகன்நாதன் | சென்னை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.