ஊர்மக்களின் உதவியுடன், ஒன்பது மாதங்களாகச் சாய்ந்த நிலையில் இருந்த மரத்தை ஜேசிபி, பொக்லைன் உதவியோடு தற்போது நட்டு வைத்துள்ளனர்.
கஜா புயலில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரத்திற்கு, 9 மாதங்கள் கழித்து கிராம மக்கள் மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.
நாகை மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்தில், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கே பல மாதங்கள் தேவைப்பட்டன.
மேலும், அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளதால், மரத்திற்கு டேங்கர் லாரிமூலம் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ” இந்த மரம் எங்களின் இறைவழிபாட்டு மரம். இது இப்படி சாய்ந்த நிலையில் இருந்தது மனவேதனையை அளித்தது. மீண்டும் பழையபடி விழுதுகள் விட்டு, எங்களின் சந்ததியினர் அதில் ஊஞ்சல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் நட்டுவைத்தோம்” என்கின்றனர் உற்சாகத்துடன்.
நல்ல நிலையில் இருக்கும் பல மரங்களை வெட்டி விற்பனை செய்து பணம் ஈட்ட நினைக்கும் பலருக்கு மத்தியில், சாய்ந்த மரத்தை பல ஆயிரம் செலவுசெய்து, மீண்டும் உயிர்பெற வைத்துள்ள கிராம மக்களின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.