மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலங்கார வார்த்தைகளை புகுத்தி நடப்பு நிதியாண்டின் மறு மதிப்பீட்டு வரவு செலவு திட்ட புள்ளி விபரத்தை வெளியிடவுள்ளதாக காங்ரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மேற்படி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதம் இரண்டாவது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் என்ற அளவிற்கு சரிவடைந்துள்ளது.
கொரோனா தாக்கம் வருவதற்கு முன்பே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து இருந்தது. அதனால் நடப்பு நிதியாண்டு வரவு செலவு திட்டத்தில் கூறியபடி பொருளாதார வளர்ச்சி இருக்காது. எதிர்மறையாகவே இருக்கும்.
அதனால் நிர்மலா சீதாராமன் வரவு செலவு கூட்டத் தொடரில் அலங்கார வார்த்தைகளுடன் நடப்பு நிதியாண்டின் மறு மதிப்பீட்டு திட்டம் ஒன்றை தாக்கல் செய்வார் என அஞ்சுகிறோம்.
அது பொய்யான புள்ளிவிபரங்களை உடையதாக இருக்கும். அதுபோல வரும் நிதியாண்டு வரவு செலவு திட்ட அறிக்கையும் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் விதத்தில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.