அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. எனினும் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். இதையடுத்து நேற்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை நடைபெற உள்ள தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.