ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் சூழல் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டவுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கின்றது. அடியவர்களை சோதனைக்கு உட்படுத்தி ஆலயத்துக்குள் அனுமதிக்கும் விதமாக யாழ்ப்பாண மாநகர சபையினால் மூன்று லட்சம் ரூபாய் செலவில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டவுள்ளது. அதன்படி மாநகர சபையினால் 8 சோதனைச் சாவடிகளும் ஸ்ரீலங்கா காவல்துறையினராலும் 4 சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 25 நாட்களுக்கு நடைபெறும். இதேவேளை வழமைபோன்று இந்த ஆலயத்தின் வீதிகள் மறியல் இடப்பட்ட போதும், ஏப்ரல் 21 இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு பலப்படுத்தல் காரணங்களுக்காக இம்முறை பாதுகாப்பு அதிகரிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கு ஏதுவாக யாழ்ப்பாணம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இதன்போது யாழ்ப்பாண மாநகரசபை பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாநகர சபையினால் அமைக்கப்பட்டவுள்ள சோதனைச் சாவடி நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு சோதனைச் சாவடி நிலையங்களை அமைத்து மொத்தமாக 14 சோதனைச் சாவடி நிலையங்களை அமைத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என இதன்போது ஸ்ரீலங்கா காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.