ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அணி, விமல் அணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவு – செலவுத் திட்ட உரை) நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
ஆளுங்கட்சி பக்கம் தாவுவார் எனக் கூறப்பட்ட ராஜித சேனாரத்ன வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்தார்.
நாளை (23) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதிவரை விவாதம் இடம்பெறும்.
டிசம்பர் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.