Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வை வென்றெடுக்க டில்லியின் பங்களிப்பு அவசியம்! – ஜெய்சங்கரிடம் தமிழ்க் கட்சிகள் வேண்டுகோள்

தீர்வை வென்றெடுக்க டில்லியின் பங்களிப்பு அவசியம்! – ஜெய்சங்கரிடம் தமிழ்க் கட்சிகள் வேண்டுகோள்

1 minutes read

“அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் அரசால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படுவது இல்லை. எனவே, இனியும் காலம் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவிடம் இன்று கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் இன்று காலை வலியுறுத்தினேன். கூட்டுச் செய்தியாளர் சந்திப்பிலும் பகிரங்கமாக அறிவித்தேன்.13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.

13 ஐ ஏற்றால், ஒற்றையாட்சியை ஏற்றதாகிவிடும் என இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

“இருப்பதை அமுல்படுத்தாவிட்டால், அதுவும் இல்லாமல்போகலாம். எனவே, இடைக்காலத் தீர்வாகவேனும் 13 ஆவது திருத்தத்தை ஏற்க வேண்டும். தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது மட்டும் தீர்வு அல்ல” – என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

“தெற்கின் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்களுடன் நாங்கள் பேசலாம். அவர்களின் மனநிலையையும் நாங்கள் மாற்றலாம்” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார். கஜேந்திரகுமார் எம்.பியின் இந்தக் கருத்துக்குச் சுமந்திரன் எம்.பியும் இணங்கினார். எனினும், இருக்கின்ற அதிகாரங்களை நாங்கள் உடனே பெற வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.

“இலங்கையின் தெற்கு மக்களுடன் கலந்துரையாடும் பணியை ஒரு நாடு என்ற வகையில் இந்தியாவால் மேற்கொள்ள முடியாது. அதனை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்” – என்று தமிழ்த் தலைவர்களிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துரைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More