Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு, கிழக்கு முற்றாக முடக்கம்! – சகல துறைகளும் ஸ்தம்பிதம்

வடக்கு, கிழக்கு முற்றாக முடக்கம்! – சகல துறைகளும் ஸ்தம்பிதம்

5 minutes read

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று ஹர்த்தால் போராட்டத்தால் முற்றாக முடங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் பொது முடக்கம் காரணமாக ஸ்தம்பித்துள்ளன.

அரசால் கொண்டு வரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கைவிடக் கோரியும், தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த – சிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று முன்னெடுக்கப்படும் பொது முடக்கம் காரணமாக அனைத்துத் துறைகளும் செயலிழந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஓரணியாக விடுக்கப்பட்ட பொது முடக்க அழைப்பை வடக்கு – கிழக்கை பிரதான தளமாகக் கொண்டு செயற்படும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தன. அத்துடன் தொழிற்சங்கங்களும் அழைப்பை ஏற்று ஆதரவைத் தெரிவித்திருந்தன. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்று முடங்கியுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வர்த்தக சங்கங்களும் பொது முடக்கத்துக்கு ஆதரவளித்துமையால் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுச்சந்தைகளும் இயங்கவில்லை.

அதேபோன்று தனியார் போக்குவரத்துச் சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தமையால் அவற்றின் போக்குவரத்துச் சேவைகளும் நடைபெறவில்லை.

ஆசிரியர் சங்கமும் பொது முடக்கத்துக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தமையால் அவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தமையால் இன்று பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

நீதிமன்றங்களில் இன்று எந்தவொரு சட்டத்தரணிகளும் முன்னிலையாகவில்லை.

மேலும், கடற்றொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தமையால் இன்று மீன் சந்தைகளும் கூடவில்லை.

இன்றைய ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு பல பொது அமைப்புக்களும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கோரியிருந்தன.

அதற்கமைய வடக்கு, கிழக்கு தமிழ் – முஸ்லிம் சகோதரர்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று ஓரணியில் நின்று சர்வதேச சமூகத்துக்கு ஒரு தெளிவான செய்தியை எடுத்துரைத்துள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More