Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறிமலை ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை ஆலய பூசகரும் நிர்வாக உறுப்பினரும் விடுவிப்பு!

1 minutes read

நெடுங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஆகிய இருவரும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டனர்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

எனினும், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவு கருத்தில்கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டி நெடுங்கேணிப் பொலிஸாரால் ஆலய பூசாரியும், ஆலய நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும், குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும், பூசாரியும் இருப்பதால் அதே வழக்கில் அவர்களைச் சந்தேகநபர்களாகப் பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிவான் அவர்களை விடுவித்தார்.

அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ, மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, இறை விக்கிரகங்களை உடைத்தவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டது.

ஆலய நிர்வாகம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி.திருவருள் தலைமையிலான வவுனியா சட்டத்தரணிகள் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More