Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! – அரசியல் கைதிகள் கோரிக்கை

எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! – அரசியல் கைதிகள் கோரிக்கை

1 minutes read
எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள் என்று பல வருடங்களாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கடந்த  2006 ஓகஸ்ட் 14 ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளை,  ‘நிரபராதிகள்’ எனத் தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களைக் கடந்த 10 ஆம் திகதி  விடுதலை செய்துள்ளது.

அந்த வழக்கில், மாத்தளையைச் சேர்ந்த குடும்பஸ்தரான சுப்பிரமணியம் சுரேந்திரராஜா சார்பில் சட்டத்தரணிகளான தனுக்க நந்தஸ்ரீ, எஸ்.அனுஷாங்கன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் குறித்த குடும்பஸ்தரிடம் துன்புறுத்திப் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தமது வாதாட்டத்தின் மூலம் சட்டத்தரணிகள் வலுவிழக்கச் செய்திருந்தனர்.

இதேவேளை, முல்லைத்தீவைச் சேர்ந்த கனகரத்தினம் ஆதித்தனுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகராஜா நிரோஜன் சார்பில் முன்னாள் நீதிபதியான சிரேஷ்ட சட்டத்தரணி கனகா சிவபாதசுந்தரமும் முன்னின்று வழக்கை நெறிப்படுத்தினர்.

மூன்று சந்தேகநபர்களை ‘நிரபராதி’ என நிரூபிப்பதற்கு எமது நாட்டில் 15 ஆண்டுகள் எடுத்துள்ளது என்பது  உண்மையில் கவலை தரும் விடயமே.

இருப்பினும், மிக நீண்ட காலங்களாக துன்பங்களை மாத்திரமே அனுபவித்து வந்த இவர்கள் விடுதலை பெற்று அவர்தம் குடும்பங்களுடன் இணைந்துள்ளமை பெருமகிழ்ச்சியைத் தருகின்றது.

இவர்கள் விடுதலையாகி வருகின்றபோது, அங்கு சிறையில் இருக்கும் எமது உறவுகள்,  “எங்களையும் உயிருடன் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!” எனக் கூறி  விழி கலங்க வழியனுப்பி வைத்துள்ளனர் என்று ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இதேபோன்று, மேலும் சந்தேகநபர்களாக நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளும் காலதாமதமின்றி விடுவிக்கப்படவேண்டும்.

அத்துடன், 15 முதல் 28 ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 10 பேரையும் ஜனாதிபதி பொது மன்னிப்பளித்து விடுவித்து அவர்களது எஞ்சியுள்ள வாழும் காலத்தையேனும் மெய்யுறுதி செய்ய அவர்களை உயிர்ப்புடன் விடுவிக்க வேண்டும் என்று ஒரு மனிதநேய அமைப்பாக நாம் விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடந்த பல வருடங்களாகத் தமிழ் அரசியல் கைதிகளின் பொது நன்மைக்கென்று குரலுயர்த்தி வருகின்ற ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பானது, மீதமுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளதும் விடுதலை வாழ்வு மெய்ப்படும் வரையில் நடைமுறைக்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தளர்வுறாது செயற்படும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More