மட்டக்களப்பில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் என 3 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.
2025 ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, “பிள்ளையான்” என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அச்சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கினை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சந்தேக நபர்கள் மூவரும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (சூம்) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது பிள்ளையான் உட்பட 3 சந்தேக நபர்களையும் தொடர்ந்து செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்ததுடன் லண்டனில் உள்ள பொலிஸ் பாய்ஸ்க்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளை பிறப்பித்தார்.