செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி

1 minutes read

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த தொகை ரூ.200 மில்லியனைத் தாண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் கனடா வருகை விசா, வேலை அனுமதி (Work Permit), சிறுவர்களுக்கான பாடசாலை விசா உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இலங்கையில் இரத்தினக்கல் உரிமம் (Gem Licence) பெற்றுத் தருவது மற்றும் அரசாங்கத்துடன் பல்வேறு ஒப்பந்தங்கள் இருப்பதாகக் கூறியும் பொதுமக்களை நம்ப வைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 1988/89 காலப்பகுதியில் கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக சந்தேகநபர் தம்மிடம் தெரிவித்ததாகவும் சில பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

இரண்டரை மாதங்களுக்குள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து, ஒவ்வொருவரிடமிருந்தும் பெருந்தொகையான பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒரு பயணியிடம் போலியான கனேடிய விசா ஒன்றை வழங்கி, அதற்காக சுமார் ரூ.15 மில்லியன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபர் மேலும் பல நிதி மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாங்களும் பணத்தை இழந்துள்ளதாகக் கூறும் பலர் தற்போது பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து உரிய முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.