சென்னை : தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார்.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன. இந்தநிலையில் கல்லூரிகளை திறந்து விக்க ஜனவரி 12 ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது. 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிரது.
பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையில் ராகுல்காந்தி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.