புதுடெல்லி: பெருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் என்பதில் நடப்பு கல்வி ஆண்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வாரம் முழுவதும் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளை மட்டும் விசாரிக்க பட உள்ள நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க அமைக்க முடிகிறதா என்பது குறித்து ஆலோசித்து நாளை(இன்று) பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.