இங்கிலாந்தில் தங்களது மருத்துவ நிலைமை தொடர்பான தகவல்களை ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனமான DVLAக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு தகவல் வழங்கிய சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரின் வாகன ஓட்டுநர் உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநரின் உடல்நிலை அல்லது மருத்துவ நிலைமை காரணமாக அவர் வாகனம் செலுத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனக் கருதப்பட்டால், அவரது ஓட்டுநர் உரிமத்தை இரத்துச் செய்ய அல்லது திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படலாம்.
வயதான ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தாங்கள் தொடர்ந்து வாகனம் செலுத்துவதற்கு உடல்ரீதியாகவும் பார்வை ரீதியாகவும் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்த கட்டாய பார்வைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை தொடர்பில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் வயது அதிகரிக்கும் நிலையில் ஓட்டுநர்களின் பார்வை மற்றும் மருத்துவத் தகுதி தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவதன் மூலம், வீதி விபத்துகளை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, மருத்துவ நிலைமைகள் தொடர்பில் DVLAக்கு தகவல் வழங்குவது ஓட்டுநர்களின் பாதுகாப்பை மட்டுமன்றி, அவர்களுடன் பயணிக்கும் ஏனையவர்களினதும் வீதி பயன்படுத்துவோரினதும் பாதுகாப்புடன் தொடர்புடையது என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.