செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் | காணாமல் போன உறவுகளின் சங்கம்

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் | காணாமல் போன உறவுகளின் சங்கம்

1 minutes read

தமிழர் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் கொண்டுசெல்வதற்கோ அல்லது ஐ.நா. பொதுச் சபையின் மூலம் ஆலோசனைக் கருத்தைப் பெறுவதற்கோ பிரித்தானியா சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவில் சனிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் உருக்கமாகக் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்த முக்கிய கருத்துக்கள்,

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த அவர்கள், கடந்த 3,478 நாட்களாகத் தங்களது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடி வீதியில் நின்று போராடி வருவதாகச் சுட்டிக்காட்டினர்.

1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்தபோது உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு, தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது. காலனித்துவ ஆட்சியிலும் அதன்பின்னரான அதிகாரக் கையளிப்பிலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும் சட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்க மாற்றங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் வாக்குறுதிகள் எவையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதிலை இதுவரை வழங்கவில்லை.

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் (Advisory Opinion) பெறுவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு அரசியலமைப்பு மாற்றங்கள் தோல்வியடைந்துள்ளதால், தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதும், அமைதியான ஜனநாயக நடைமுறையின் மூலம் சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்குவதும் ஒரு சர்வதேச அரசியல் தீர்வாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினைக்குச் சர்வதேச சட்டத்தின் மூலம் நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர பிரித்தானியாவும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.