இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி சுப்பர் சிக்ஸில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றுள்ள நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் அணி, தனது 7ஆவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்ஸ் அணியை இன்று எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
புளூ ஸ்டார் (9 – 1), ரெட் ஸ்டார் (4 – 0), சீ ஹோக்ஸ் (1 – 0), டிபெண்டர்ஸ் (2 – 1), ரட்னம் (5 – 1), நியூ யங்ஸ் (6 – 0) ஆகிய அணிகளை அப்கன்ட்றி லயன்ஸ் வெற்றிகொண்டது.
சீ ஹோக்ஸ் அணியுடனான போட்டியைத் தவிர்ந்த மற்றைய ஐந்து போட்டிகளிலும் அப்கன்ட்றி லயன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.
இதுவரை 6 போட்டிளில் 27 கோல்களைப் போட்டுள்ள அப்கன்ட்றி லயன்ஸ் எதிரணிகளுக்கு 3 கோல்களை மாத்திரமே விட்டுக்கொடுத்துள்ளது.
அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்களான பெஞ்சமின் யோர்க் (7), மொஹமத் ஆக்கிப் (5), நவீன் ஜூட் (5), ஆகியோர் அதிக கோல்கள் அடித்தவர்களில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர்.
இன்றைய போட்டியிலும் தங்களது அணிக்கு கோல் மழை பொழிய இவர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் புளூ ஈக்ள்ஸ் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிகொண்டதுடன் ஒரு போட்டியை சமப்படுத்திக்கொண்டது. மற்றைய 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
நியூ யங்ஸ் (1 -1) அணியுடனான போட்டியை சமப்படுத்திக்கொண்ட புளூ ஈக்ள்ஸ், டிபெண்டர்ஸ் (2 – 0), ரடனம் (2 – 0) ஆகிய அணிகளை வெற்றிகொண்டது.
அதேவேளை புளூ ஸ்டார் (1 – 3), கலம்போ எவ்சி (0 – 1) ஆகிய அணிகளிடம் புளூ ஈக்ள்ஸ் தோல்விகளைத் தழுவியது.
இக் கழகம் 6 கோல்களைப் புகுத்தியுள்ளதுடன் 6 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
இப் போட்டி முடிவுகளின் பிரகாரம் 7 புளளிகளுடன் புளூ ஈக்ள்ஸ் 6ஆம் இடத்தில் இருக்கிறது.
