மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் நடத்திவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம் (15) சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரை தடுத்து நிறுத்தப்படாத நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த நீதி கோரிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதோடு, 1095 நாளையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால் நடத்தப்பட்டது.

இதன்போது “மகாவலியே வெளியேறு”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே”, “கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பினை தடுத்து நிறுத்து”, “தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா? சட்டத்தினை சமமாக அமுல்படுத்து”, “ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்”, “மகாவலியே மௌனம் காப்பது ஏன்?”போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை குறிக்கும் 1095 நாளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்தத்தினை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை முன்னெடுத்தார்.

இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும், தங்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 12, 13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாமற்போயுள்ளதோடு, உணவின்றி மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர்.
சட்டம் இரு வேறாகப் பிரயோகிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள் சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும் நிலையில், மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறினால், தங்களது அறவழிப் போராட்டத்தைச் “சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக” மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால் பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும், இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.









