சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜனை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி சந்தியில் பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“அனோஜனை விடுதலை செய்யவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகொண்டு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தண்டனை தொடர்பில் மீளாய்வு செய்வதுடன், அவரது விடுதலைக்கான சட்ட ரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை சவூதி அரேபிய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பான உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்தி, சம்பவத்தின் பின்னணி, சட்ட நடைமுறைகள் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் உரிய முறையில் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
“அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் உடனடியாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பதே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக அமைந்திருந்தது.


